சென்னை: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததது அமமுக. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் டிடிவி சந்தித்து தனது கூட்டணியை உறுதி செய்தார்.

 தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை இணைக்க முயற்சித்து நடக்கிறது. அந்தவகையில் பாமகவின் அன்புமணி, வாசன், ஐஜேகே, புதிய தமிழகம் என சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.  தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.

முன்னதாக அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசியபோது இதனை உறுதிப்படுத்தினார். அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போன்றவர்கள் கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டை. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என ஏற்கெனவே நான் பொதுக்குழுவில் சொன்னேன். பழைய விஷயங்களை நினைத்து, கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்று நோக்கத்தோடு இந்த முடிவெடுக்கிறோம். நாங்கள் விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி வருவதற்கு மக்களாட்சி வருவதற்கு நல்லாட்சி வருவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்த்நது, கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன் இன்று(புதன்கிழமை) காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் டிடிவி தினகரன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கையை உயர்த்தி கூட்டணியை உறுதி செய்தார். தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]