புதுடெல்லி:

பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இராணி மற்றும் கனிமொழி ஆகியோர், ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 2017-ம் ஆண்டு முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். தற்போது முதல் முறையாக குஜராத் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரவிசங்கர் பிரசாத் மற்றும் இராணி ஆகியோரும் முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை 55 ஆயிரத்து 120 வாக்குகள் வித்தியாசத்தில் இராணி தோற்கடித்தார். தொலைக் காட்சி நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய இராணி, மக்களவைக்கு 2 முறை போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

2004-ம் ஆண்டு டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் கபில்சிபலிடம் தோல்வியடைந்தார். 2014-ம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தியிடம் தோல்வியடைந்தார்.

திமுகவின் மூத்த தலைவர் கனிமொழியும் மக்களவைக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.