கொல்கத்தா: அடையாளம் தெரியாத ஒரு ஆதிவாசி வேட்டைக்காரரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அவரை, வங்காளத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டா என்பதாக நினைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது அரசியல் அரங்கில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது, பன்குரா என்ற இடத்தில், ஒரு சிலைக்கு மாலை அணிவித்தார். அதுவொரு அடையாளம் தெரியாத ஆதிவாசி வேட்டைக்காரரின் சிலை.

ஆனால், அதை ஆதிவாசி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்ஸா முண்டாவின் சிலை என நினைத்து, அவரைப் புகழ்ந்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார் அமித்ஷா. இதுதான் தற்போது நகைப்பை கிளப்பியுள்ளது. அமித்ஷாவை வெளிநபர் என்று கிண்டலடித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

உடனடியாக, அந்த ஆதிவாசியின் சிலைக்கு கீழே, பிர்ஸா முண்டாவின் சிலையைக் கொண்டுவந்து வைத்து நிலைமையை சமாளிக்க முயன்றது பாரதீய ஜனதா என்பது குறிப்பிடத்தக்கது.