வாஷிங்டன்: ரஷ்யாவுடனான இருதரப்பு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதையடுத்து, புதிய ஏவுகணை சோதனை நடத்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது அமெரிக்கா.

2021ம் ஆண்டு காலாவதியாகவுள்ள அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் பெரிதாக எழுந்த நிலையில் முடிவுக்கு வந்துள்ளது. அணு ஆயுதங்கள் கட்டுப்பாடு தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பாக ரஷ்யா மற்றும் சீனாவுடன் தான் பேசி வந்ததாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால் நாங்கள் எங்களுடைய ஆயுத உற்பத்தி திட்டங்களை நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால், ஒப்பந்த அம்சங்களை ரஷ்யா மீறியதை தொடர்ந்து, ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது புதிய ஆயுத உற்பத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் உள்ளோம் என்று தெரிவிக்கின்றனர் பாதுகாப்பு தொடரபான அமெரிக்க அதிகாரிகள்.

அந்த ஒப்பந்தத்தில் சீனா மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் போன்றவை உள்ளடக்கப்படவில்லை என்று ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த ஒப்பந்தம் மீறப்படுவதாக இருநாடுகளும், குறிப்பாக அமெரிக்கா அதிகம் குற்றம்சாட்டி வந்தது.

இனிவரும் காலங்களில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் விவாதித்து அணு ஆயுத குறைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புவதாக தெரிவித்தார் அமெரிக்க அதிபர்.