புதுடெல்லி:

ஜெட் ஏர்வேஸ் துபாய் சேவையை ரத்து செய்யும்போது, அதற்கான வாய்ப்பை தங்களுக்கு வழங்கக் கோரி, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், வெளிநாட்டு சேவையை அடிக்கடி ரத்து செய்து வருகிறது.

இந்நிலையில், போட்டி நிறுவனங்களான ஏர் இந்தியாவும், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனமும் ரத்து செய்யப்படும் இந்திய- துபாய் சேவையை தங்களுக்கு ஒதுக்குமாறு மத்திய விமானப் போக்குவரத்து துறையிடம் கோரிக்கை வைத்துள்ளன.

அரசு ஒதுக்கும் வாரந்தோறும் 13 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனுமதியை, ஜெட் ஏர்வேஸ் பயன்படுத்தவில்லை என்றால், இந்தியா-துபாய் சேவையை தாங்கள் தொடர அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் பயன்படுத்தாத சேவையை மற்ற விமான சேவை நிறுவனங்களுக்கு தருவதால் பயணிகள் பயனடைவர் என்று தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட நிறுவனத்தைவிட பயணிகள் மற்றும் விமான சேவையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.