டெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், ஏர்பஸ் மற்றும் போயிங்கிலிருந்து மொத்தம் 470 அகலமான மற்றும் குறுகிய  விமானங்களை வாங்குவதாகக் அறிவித்து உள்ளது. மேலும் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6.40 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் வாங்கியது. அது முதல் ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டாடா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய விமானங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும் மொத்தம் சுமார் ரூ.6.40 லட்சம் கோடியில் வாங்க உள்ளது. அதன்படி ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதில் 40 அகன்ற வகையான ஏ350 ரக விமானங்களும் அடங்கும்.

இந்த தகவலை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையே நேற்று நடந்த காணொலி காட்சி சந்திப்பு நிகழ்வில் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டார். இதன் மூலம் ஏர் இந்தியாவுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு புதிய விமானங்கள் வாங்கப்படுகின்றன.

முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் இருந்தபோது கடந்த 2005-ம் ஆண்டு 111 விமானங்கள் வாங்கப்பட்டு இருந்தன. அதன் பிறகு தற்போதுதான் புதிய விமானங்கள் வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டு இறுதியில் புதிய விமானங்கள் வந்து சேரும் என்றும் 2025-–ல் பெருமளவில் கிடைக்கப்பெறும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த காணொளி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  சிவில் விமானப் போக்குவரத்து துறை இந்தியாவின் வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அடுத்த 15 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கு அதிகமான விமானங்கள் தேவைப்படுகின்றன.சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்துவது நமது தேசிய உள்கட்டமைப்புக் கொள்கை யின் முக்கிய அம்சமாகும்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 147 ஆக உயர்ந்து இருக்கிறது. உடான் திட்டம் மூலம் இந்தியாவின் தொலைதூர பகுதிகளும் வான்வழி இணைப்புகளை பெற்றுள்ளன. இது மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கிறது. விமான போக்குவரத்து துறையில் உலகின் 3-வது பெரிய சந்தை என்ற நிலையை வெகுவிரைவில் இந்தியா பெறும்.

‘இந்தியாவில் தயாரிப்போம்-உலகுக்காக தயாரிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் விமான உற்பத்தியில் ஏராளமான புதிய வாய்ப்புகள் திறந்துள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை பிரச்சினையாக இருந்தாலும் சரி, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, இந்தியாவும் பிரான்சும் இணைந்து நேர்மறையான பங்களிப்பைச் செய்கின்றன. இன்று, சர்வதேச ஒழுங்கு மற்றும் பலதரப்பு அமைப்பின் நிலைத்தன்மை மற்றும் சமநிலையை உறுதி செய்வதில் இந்தியா-–பிரான்ஸ் இடையேயான கூட்டு உறவு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ‘ஏர் இந்தியா-–போயிங் இடையே போடப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் மூலம் 200-க்கு மேற்பட்ட அமெரிக்க தயாரிப்பு விமானங்கள் வாங்கப்படுவதை இன்று அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்’ என தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தப்படி 190 பி737 மேக்ஸ் விமானங்கள், 20 பி787 விமானங்கள், 10 பி777எக்ஸ் விமானங்கள் என மொத்தம் 220 விமானங்கள் 34 பில்லியன் (சுமார் ரூ.2.72 லட்சம் கோடி) செலவில் வாங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், 70 விமானங்கள் வருங்கால கொள்முதல் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதால் மொத்தம் 290 விமானங்கள் 4,950 கோடி டாலர் (சுமார் ரூ.4.06 லட்சம் கோடி) மதிப்பில் கொள்முதல் நடைபெற உள்ளது என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு விமான நிறுவனத்தின் மிகப்பெரிய விமான ஆர்டர்களில் இதுவும் ஒன்றாகும்.