சென்னை: அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என்று கூறிய  சபாநாயகர் அப்பாவு, அவர்மீதான பிரச்சினை தனது ஆய்வில் இருப்பதாக கூறினார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாயில் இன்று காலை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீரானது அடுத்த 138 நாட்களுக்கு அதாவது வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை பாசனத்திற்காக திறந்து விட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்தில் இருந்து இன்று முதல் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 13 ஏக்கர் நிலம் 52 குளங்கள் மூலமாக பாசன வசதி பெறும்.  மீதமுள்ள நிலங்கள் நேரடி பாசன நிலங்களாக இருந்தாலும் கடந்த காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நேரடியாக சென்றதில்லை. இந்த முறை இந்த குளங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், இபிஎஸ் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  சட்டமன்ற தேர்தலில்  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தில்  வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அதன்பிறகு நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களத்தில் நின்று அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார்.

பொதுவாக ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள், அக்கட்சியின் கொறடாவின் உத்தரவுபடிதான் செயல்பட முடியும். ஆனால், இந்த விவகாரத்தில்  அதிமுக கொறடா இதுவரை எந்தவொரு புகாரும் தரவில்லை. அது எதற்கு என்று எனக்கு தெரிவில்லை என்றார்.

இருந்தாலும்,   இந்திய அரசியலமைப்புச் சட்டம் 10-வது அட்டவணைபடியும், உச் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் ஒரு சின்னத்தில் வெற்றி பெற்று அந்த சின்னத்திற்கு எதிராக ஓட்டு போட்டாலோ அல்லது இவர்கள் சொல்வது போல் அந்த கட்சிக்கு எதிராக அவரது செயல்பாடு இருந்தாலும் நிச்சயமாக அதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தவிஷயம் எனது ஆய்வில் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.