சென்னை: வரும் மே.29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே. 29, 30ம் தேதிகளில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் கூட்டணி உருவாகி இருப்பதுடன், தேர்தல் களப்பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதுடன், மேலும் சில கட்சிகளை இழுக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. கூட்டணி தொடர்பாக பல கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
இதுமட்டுமின்றி, அதிமுக கட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்படி, வரும் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டம் இரண்டு நாட்களும் காலை 9.30 மணி, பிற்பகல் 3.30 மணி என இரு நேரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே 29-ஆம் தேதி காலை 9:30 மணி: புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை.
மாலை 3:30 மணி: ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கடலூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.
மே 30-ஆம் தேதி காலை 9:30 மணி: திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களுடன் ஆலோசனை.
மாலை 3:30 மணி: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களுடன் கூட்டம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.