காபூல்: பெண்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை  ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு  தாலிபான்கள் விதித்துள்ளனர். இதற்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்கள் அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும் தாலிபான்களின் பல்வேறு அச்சுறுத்தல் காரணமாக, அங்கு பசி பட்டினி ஏற்பட்டு வருகிறது. தாலிபான்களுக்கு உதவ எந்தவொரு நாடும் முழுமையாக முன்வராத நிலையில், அங்கு வறுமை தாண்டவமாடி தொடங்கி உள்ளது.

இந்த  நிலையில் பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது – அஃப்கானிஸ்தானில் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபன் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பெண்கள் நடித்துள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது எனவும், பெண் ஊடகவியலாளர்கள், ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் அங்கி அணிந்தவாறுதான், செய்தி அறிக்கைகளை தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகமது நபி குறித்தோ, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளையோ ஒளிபரப்பக் கூடாது எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்களின் இந்த அறிவிப்புக்கு ஊடகவியலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆப்கன் தலைநகர் காபூலின் 108 ஊடக நிறுவனங்கள் 2020 இல் 4,940 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன, இதில் 1,080 பெண்கள், அவர்களில் 700 பேர் பத்திரிகையாளர்கள். எட்டு பெரிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த 510 பெண்களில், 39 பத்திரிகையாளர்கள் உட்பட 76 பேர் மட்டுமே இன்னும் பணியில் இருப்பதாக RSF தெரிவித்துள்ளது. மற்றவர்கள் பணியை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.