சென்னை:

மிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர்  மாலை 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டம் தீட்டியிருப்பதாக தேர்தல் ஆணையரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  வேலூர் பாராளுமன்ற தொகுதி ரத்து தவிர மற்ற தொகுதிகளில்  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு மதிய நேரத்தில் மந்தமாக நடைபெற்றது. மாலை நேரத்தில் மீண்டும் விறுவிறுப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக  சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இன்று மதியம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குனருக்கு (தேர்தல்) அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கிய காலை முதலே வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக வாக்களித்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாலை 3.30 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில், காவல் துறையின் பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்க செய்யப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.