சென்னை

டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் கருத்துக்கு ஆபாசமாகப் பின்னூட்டம் இட்டதற்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி அன்று வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் மேற்கொண்டார்.  அவர் பெரோஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற விருந்த நிகழ்ச்சிக்கு அவர் சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் சென்றது.  வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் நிறுத்தப்பட்டது.

சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலையில் மாற்றம் இல்லை என்பதால் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பினார். இதையொட்டி அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. இந்நிலையில் பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி விவகாரம் பெரும் சர்ச்சையாகிச் சூடுபிடித்து வருகிறது.

இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சொந்த நாட்டுப் பிரதமரின் பாதுகாப்பிலேயே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜக வாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்’ என பதிவிட்டார்.

நடிகர் சித்தார்த் இதற்கு அளித்த பதில் மிகவும் ஆபாசமாக உள்ளதாக கண்டனம்  எழுந்தது. சாய்னாவைப் பெண் என்றும் பாராமல் நடிகர் சித்தார்த் தரக்குறைவாக விமர்சித்ததாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்தது.   இதையொட்டி தனது டிவிட்டர் பதிவு தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார்.

சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ”கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் பதிவிட்ட டுவிட்டிற்கு பதிலாக நான் பதிவிட்ட மூர்க்கத்தனமான டுவிட்டிற்கு மன்னிப்பு கோருகிறேன். நகைச்சுவையைப் பொறுத்தவரை, புரிந்துகொள்ளக்கூடியதாக நகைச்சுவை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது நகைச்சுவையல்ல.

சரியாக புரிந்துகொள்ள முடியாதபடியாக நான் பதிவிட்ட நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். இந்த விவகாரத்தை விட்டுவிட்டு எனது இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் எப்போதும் எனது வெற்றியாளர் தான்’ எனப் பதிவிட்டுள்ளார்.