மதுரை:  பிரபல யுடியூபர் சாட்டை முருகனின் வீடியோ ஆடியோ பதிவுகளை விதிகளை மீறி வெளியிட்ட திருச்சி டிஐஜி வருண்குமாருக்கு எதிரான புகார் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்கு பெயர் போனவர்களில் ஒருவர் திருச்சி டிஜஜி வருண்குமார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன்  மோதல் போக்கில் ஈடுபட்டு, சந்தைக்கடை சண்டையை தொடங்கி அரசியல் கட்சியினர் போல பேசி வருகிறார்.  அவரது அத்துமீறிய செயல்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருணும் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். இவர்களது நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி நீதிமன்றங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யுடியூபர் சாட்டை முருகனின் வீடியோ ஆடியோ பதிவுகளை விதிகளை மீறி வெளியிட்ட திருச்சி டிஐஜி வருண்குமார் மீது  நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சாட்டை துரைமுருகன். அப்போது கலைஞர், ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அவர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரை நீதி மன்றம் ஜாமினில் விடுதலை செய்தது.

இதையடுத்து,   திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்  சாட்டை முருகன் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், “ஆளும் கட்சியோடு சேர்ந்து டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார். அவருடைய செயல் காவல்துறை விதிமுறைகளுக்கு எதிரானது. தன்மீத பொய் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் தனது 2 செல்போன்களை பறித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

மேலும்,  திருச்சி டிஐஜி வருண் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார். ஜாமினில் வெளியான பின்னும் செல்போனை ஒப்படைக்காததால் வழக்கு தொடர்ந்த போது என் செல்போன் ஆடியோ லீக் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி டிஐஜி வருண் தனது பள்ளித்தோழரான திருச்சி சூர்யாவின் எக்ஸ் தளத்தில் ஆடியோவை பதிவேற்றம் செய்தார் என்றும் சாட்டை துரைமுருகன் கூறினார். மேலும் மனுவில், “நாதகவை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் 20 பெண் காவலர்களை கொண்டு தாக்கி சீமானுக்கு எதிராக வாக்குமூலம் பெற துன்புறுத்தல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்துள்ளார். திருச்சி டிஐஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைவர், திருச்சி ஆணையருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த  உயர்நீதிமன்றம் மதுரை கிளை,  திருச்சி டிஐஜி வருண் மீதான புகாரை விசாரித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- நாம்தமிழர் கட்சியின் மீதும் ,என் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு சட்டவிரோத கைது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பொதுவெளியில் நாம்தமிழர் கட்சி குறித்து அவதூறு பரப்பும் திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நான் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு ! நீதி வெல்லும் !

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.