தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம்.

இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார். வசனகர்த்தாவாக ஜெயமோகன் , சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாத், நடன வடிவமைப்பாளராக பிருந்தா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.

விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் , ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாரா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படப்பிடிப்பு கொரோனா பாதிப்புக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன்பிறகு, படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டதால் கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாததால் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது கார்த்தியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கார்த்தியின் ஒத்துழைப்புடன் படப்பிடிப்பு தினமும் இரவு 11 மணி வரையிலும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. வேகமாக படபமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 5 ஆம் தேதி முடிவடையவுள்ளதாக கூறப்படுகிறது.