தனது 59வது வயதில், எதிர்பாராமல் மரணமடைந்த நடிகர் விவேக்கிற்கும், கடந்தாண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் ஒரு சிறிய ஒற்றுமை உண்டு.

கடந்த 1987ம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான “மனதில் உறுதி வேண்டும்” திரைப்படத்தில், முதன்முதலாக தனது 26வது வயதில் வாய்ப்பு பெற்று நடித்திருப்பார் விவேக்.

கதாநாயகி சுஹாசினியின் தம்பியாக, விவேக் என்ற பெயரிலேயே, கண்களை உருட்டி உருட்டி நடித்திருப்பார் அவர். அந்தப் படத்தில்தான், முதன்முதலாக ஒரு தமிழ் படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுவார் எஸ்பிபி. அதற்கு முன்னதாக, 1971ம் ஆண்டு, சோ.ராமசாமியின் “முகமது பின் துக்ளக்” என்ற தமிழ் திரைப்படத்தில், ஒரு சிறிய கெளரவ வேடத்தில் தோன்றியிருப்பார் எஸ்பிபி.

ஆனால், “மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம்தான், அவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் என்று கூறப்படும் வகையில், அர்த்தனாரி என்ற பெயரில், ஒரு மருத்துவராக வருவார் எஸ்பிபி. இது வலுவான ஒரு கதாப்பாத்திரம்!

அந்த வகையில், பன்முக கலைஞர் விவேக் அறிமுகமான தமிழ் திரைப்படத்திலேயே, பழம்பெரும் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், முதன்முதலாக ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றினார்.

இந்தவகையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் மறைந்துபோன அந்த 2 கலைஞர்களும், தங்களுக்குள் இத்தகையதொரு ஒற்றுமையைப் பெற்றுள்ளார்கள்..!

மேலும், கொரேனா தொற்றால் எஸ்பிபி மரணமடைந்த நிலையில், விவேக்கின் மரணத்திலும், கொரோனா தடுப்பூசி தொடர்புபடுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.