புதுச்சேரி:
கடலூர், விழுப்புரம் எல்லைகள் முழுமையாக மூடப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சியில் உரையாடினார். புதுச்சேரி பேரவையில் இருந்து முதல்வர் நாராயணசாமியும் இந்த உரையாடலில் பங்கேற்றார். இக்கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி பேசும்போது, அமெரிக்கா போன்ற அதிக பாதிப்புள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு. மேலும், இந்த தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதமும் மிகவும் குறைவு. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆளும் கட்சி மாநிலங்களாக இருந்தாலும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதால் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகிறோம். கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்ததாக முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் உள்ளூர் மக்களால் கொரோனா தொற்று பரவவில்லை. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்களால் தான் கரோனா தொற்று வேகமாக பரவுகிறது.

தொடக்கத்தில் 14 நாட்கள் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், எல்லைகளை திறந்துவிட்டதால் வெளிமாநிலத்தவர்கள் மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவிவிட்டது. எனவே, புதுச்சேரி மாநில எல்லைகள் இன்று முதல் முழுவதுமாக மூடப்படும். சென்னை, விழுப்புரம், கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் எல்லைகளும், நாகை, மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் வரும் எல்லைகளும் மூடப்படும். புதுச்சேரிக்குள் வெளிமாநில மக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்காக புதுச்சேரிக்குள் இ-பாஸூடன் வருவோர்களும் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். புதுச்சேரியில் கடைகள் திறக்கும் நேரம் குறித்து வியாபாரிகளுடன் பேசி மீண்டும் கடைகள் திறக்கும் நேரம் நிர்ணயிக்கப்படும் என்றார்.