சென்னை:
கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் இருந்த கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள்:

1.தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கு பயணிப்பவர்கள்:

  • நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படும்.
  • மற்றவர்கள் 14 நாட்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

2.பிற மாநிலங்கள், யூனயன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள்:

  • பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.
  • கொரோனா நோய்த் தொற்று இல்லாதவர்கள்7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். முக்கியமாக நோய்த் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் இருந்து வருபவர்கள் (மும்பை, குஜராத், மகாராஷ்டிரா)
  • 7 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அறிகுறி இல்லாத பட்சத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர். அவர் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள், தொடர்ந்து அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்படுவர்.

3.பிற நாடுகளில் இருந்து வருபவர்கள்:

  • பிற நாடுகளில் இருந்து வருபவர்கள் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். நோய்த் தொற்று உறுதியானால், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
  • கொரோனா நோய்த் தொற்று இல்லையென்றால், அரசு கண்காணிப்பில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.
  • 7 நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்படும். அதிலும் நோய்த் தொற்று இல்லையென்றால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர். வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4.விதிவிலக்கு:

  • தீரா நோய் பதிப்பால் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுபவர்கள்.
  • இரத்த சொந்தங்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இருப்பவர்கள்.
  • கர்ப்பிணிப் பெண்கள்.
  • பராமாரிப்பு உதவி தேவைப்படும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.

இரத்த சொந்தத்தின் இறப்பு சடங்கில் பங்கேற்க இருப்பவர்கள் மட்டும் விமான நிலைய மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.