புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அந்த நோய்க்கிருமியின் பாதிப்பு அறிகுறி தெரிபவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. அரசுக்கு சொந்தமான ஆய்வுக்கூடங்களிலும், அனுமதிக்கப்பட்ட தனியார் ஆய்வுக்கூடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது. கொரோனா அறிகுறி காணப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பரிசோதனை கருவிகளின் தேவை அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், கொரோனாமருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் பரிசோதனை கருவிகள் ஏற்றுமதி செய்ய தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.