பாரிஸ்
ரஃபேல் விமான எஞ்சின் உற்பத்தியாளர் தங்களை வரி விதிப்பின் மூலம் கொடுமைப்படுத்தக் கூடாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா தற்போது கொள்முதல் செய்துள்ள ரஃபேல் படை விமானத்தில் எம்88 என்னும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சினை பிரான்ஸ் நாட்டின் சர்வதேச நிறுவனமான சாஃப்ரான் தயாரித்துள்ளது. உலகின் தலை சிறந்த விமான எஞ்சின்கள் உற்பத்தியாளரான இந்த நிறுவன தலைமை அதிகாரி ஒலிவியர் ஆண்டிரீஸ் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்துப் பேசி உள்ளார்.
அப்போது சாஃப்ரான் நிறுவனத்தை இந்தியாவில் தொழில் தொடங்க ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்தார். அதையொட்டி இந்த நிறுவனம் இந்தியாவில் ரூ.15 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. பாரிஸ் அருகில் உள்ள வில்லாரோச் என்னும் இடத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையை ராஜ்நாத்சிங் பார்வை இட்டார்.
அப்போது அவர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் லக்னோவில் நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் பங்கு கொள்ள சாஃப்ரான் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார். ஒலிவியர் ஆன்டிரீஸ், “நாங்கள் இந்தியாவில் முதலீடு செய்து தொழிலைத் தொடங்க தயாராக உள்ளோம். தற்போது இந்தியாவில் விமான எஞ்சின்களுக்கான சந்தை மிகவும் வரவேற்புக்குரிய நிலையில் உள்ளது.
உலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் வரித்தொல்லைகள் அதிகமாக உள்ளன. எனவே எங்களுக்கு இந்தியா வரி விதிப்பு தொல்லையில் இருந்து காப்பாற்ற வேண்டும். அத்துடன் சுங்க விதிகளையும் திருத்தம் செய்ய வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் அந்த நிறுவனம் தனது முதலீட்டை தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார்.