பெங்களூரு
மூத்த பாஜக தலைவர்களை கர்நாடகா செல்லுமாறு அமித்ஷா கூறியதை ஒட்டி கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.
தேர்தல் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜகவுக்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை இருந்த போதிலும் பின்னர் எந்தக் கட்சிக்கும் சாதகமாக முடிவுகள் அமையவில்லை. தற்போதுள்ள நிலையில் பெரும்பான்மை இடங்களான 113 இடங்களை எந்தக் கட்சியும் பெறாத நிலையில் உள்ளது.
பாஜகவுக்கு 104 இடங்களும், காங்கிரஸுக்கு 78 இடங்களும் ம ஜ த வுக்கு 38 இடங்களும் சுயேச்சைகளுக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன. இதை ஒட்டி காங்கிரஸ் – ம ஜ த கூட்டணி அரசு அமைத்து ம ஜ தவுக்கு முதல்வர் பதவியும் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவியும் தர ஒப்பந்தம் உண்டாகி இருப்பதாக செய்தி வந்தது. அதே நேரத்தில் இந்த கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க கர்நாடகா ஆளுநர் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது பாஜகவின் மூத்த தலைவர்களான பிரகாஷ் ஜவடேகர், ஜேபி, தத்தா, தர்மேந்திர பிரதான் ஆகியோரை உடனடியாக கர்நாடகா வுக்கு செல்ல அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கர்நாடக அரசியலில் திருப்பங்கள் மாறி மாறி நடந்து வரும் போது இவர்கள் வருகை மேலும் ஒரு திருப்பத்தை உண்டாக்கும் என கர்நாடக மக்கள் தெரிவித்துள்ளனர்.