டில்லி
கடன் தகவல் நிறுவனம் கடந்த வருட இறுதி வரை சுமார் 12000 பேர்கள் வங்கியில் ஊழல் செய்து சுமார் ரூ.1,60,256 கோடிக்கு மேல் ஏமாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.
சிபில் என அழைக்கப் படும் கடன் தகவல் நிறுவனம் சென்ற ஆண்டு டிசம்பர் 31 வரை அனைத்து வங்கிகளிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளின் முறைகேடுகளும் ஆராயப்பட்டுள்ளன.
அந்த ஆய்வின் படி மொத்தம் 12000க்கும் மேற்பட்டவர்கள் சுமார் 1,60,256 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் ஸ்டேட் வங்கி முதலிடம் வகிக்கிறது. மொத்த வங்கிகளில் ரூ.25 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரை ஏமாற்றியதன் மொத்தத் தொகை மட்டும் ரூ.69,279 கோடி எனவும் ரூ. 1 கோடிக்கு மேல் ஏமாற்றியதன் மொத்தத் தொகை ரூ.90,976 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ. 25 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரை ஏமாற்றப்பட்டதில் பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ. 53444 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது. தனியார் துறை வங்கிகளில் ரூ. 12814 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. மீதமுள்ளது வெளிநாட்டு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்றுள்ள மோசடியாகும்.
ரூ, 1 கோடிக்கும் மேல் நடைபெற்றுள்ள மோசடிகளில் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. பேங்க் ஆஃப் இந்தியம் பேன்க் ஆஃப் பரோடா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த பிரிவில் வெளிநாட்டு வங்கிகளும் பெருமளவில் உள்ளன.
இவைகளில் பெரும்பாலானவை எந்த ஒரு ஈடும் இன்றி தரப்பட்ட கடன்கள் என கூறப்படுகிறது.