அமிர்தசரஸ்:
கடும் பனி மூட்டத்தால் எதிரெதிரே வந்த இரண்டு வண்டிகள் மோதிக்கொண்டதில், 12 அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.
வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரோட்டில் செல்லும் வாகனங்கள், எதிரே வாகனங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. அடத்தியான புகை போன்று பனி மூட்டம் காணப்படுவதால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பஞ்சாபில் உள்ள பஷில்கா மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு அரசு பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்கள், பணிக்கு செல்ல ஏதுவாக வாடகைக்கு வேன் அமர்த்தி, அதில் தினசரி சென்று வந்துள்ளனர்.
சம்பவத்தன்று காலை, கடும் பனி மூட்டமாக இருந்ததையும் பொருட்படுத்தாமல் அரசு பள்ளி ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. காண்ட் மாத்ரி என்ற கிராமம் அருகே சென்ற போது பனி மூட்டத்தால் எதிரே வந்த வாகனம் டிரைவர் கண்ணுக்கு புலப்படவில்லை.
இதையறியாமல், முன்னால் சென்ற வண்டியை ஓவர்டேக் செய்துகொண்டு செல்லும்போது, எதிரே வந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. அதில் வேனில் பயணம் செய்த 12 ஆசிரியர்கள் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் வேன் டிரைவரும் உயிரிழந்தார்.
இந்த வேனில் மொத்தம் 15 ஆசிரியர்கள் பயணம் செய்தனர். இந்த கோர விபத்து காலை 8.15 மணி அளவில் நடந்துள்ளது.
இந்த தகவலை பஞ்சாப் கல்வி மந்திரி தல்ஷித் சிங் சீமா உறுதிபடுத்தி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel