திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2024ல் திருப்பதி கோயிலில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு கூடுதலாக ஒரு கோடி லட்டுகள் விற்பனை செய்து, மொத்தம் 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். மேலும் அங்கு பக்தர்களுக்கு புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், மிளகு வடை போன்றவையும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் காலத்திற்கு ஏற்றவாறு பிரசாதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டன. அதன்பின்னர் இனிப்பு சுய்யம், அப்பம் , வடை , அதிரசம் வழங்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டில் மஹந்துக்கள் திருப்பதி கோயிலை பராமரித்து வந்தபோது, பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி வழங்கப்பட்டது. இதைத்தொடர்த்நது, 1940-ம் ஆண்டு முதல் பூந்தியை லட்டாக மாற்றி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது முதற்கொண்டு தொடர்ந்து லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் விநியோகம் செய்து வருகிறது. இந்த லட்சுக்கு உலகம் முழுவதும் தனி மவுசு உண்டு.
கடந்த ஆண்டு தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர், லட்டு பிரசாதத்தின் தரம் உயர்த்தப்பட்டது. இதனால் லட்டு பிரசாத விற்பனையும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024-ம் ஆண்டில் 12.15 கோடி லட்டுகள் விற்பனையாகி உள்ளது. இதுவே கடந்த 2025-ல் 13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி மட்டும் ஒரே நாளில் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஓராண்டாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளன. பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் தினமும் 8 முதல் 10 லட்சம் லட்டுகள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. ஏழுமலையான் கோயில் மடப்பள்ளியில் மட்டும் 700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் இவர்களுக்காக ஊதியமும் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]