சென்னை: மத்தியஅரசு 100நாள் வேலைதிட்டத்தின் பெயர் விபி ஜி ராம் ஜி  திட்டம் என மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும்,   24ந்தேதி சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்காக கொண்டு வரப்பட்ட, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்தியஅரசு மாற்றம் செய்துள்ளது. அதற்கு  ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்டம்’ என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளதுடன், ஏழை மக்களின் வேலை நாள் 125 நாளாக அதிகரித்து உள்ளதுடன், அவர்களுக்கான கூலியில், 60சதவிகிதம் மத்தியஅரசும், 40 சதவிகிதம் மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி, 1 00 நாள் வேலை திட்டத்தில் (MGNREGA) இதுவரை மத்திய அரசு 90% நிதியுதவி அளித்து வந்த நிலையில், அது 60 சதவிகிதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதுபோல,   மாநில அரசின் பங்கு பொதுவாக 10% ஆக இருந்து வந்த நிலையில், அது 40 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தி புதிய மாற்றங்களின்படி, மாநிலங்களுக்கு நிதிப் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்,  இதற்கு, திமுக உள்பட எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசை யும் ஆதரவளிக்கும் அதிமுகவையும் கண்டித்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 24.12.2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தைச் சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாள்களைக் குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, ‘கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு’ என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது,

இந்தியைத் திணிப்பது என சட்டத்தை திருத்தியும் – நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் – அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுகவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும்,

‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் 24.12.2025 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில், தலைநகர் சென்னையிலும் – மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் – ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சார்ந்த அனைத்து கூட்டணி அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசையும் – ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” .

ஒழிக! ஒழிக! G RAM G சட்டம் ஒழிக! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள்

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]