பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது.

243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ந்தேதி நடைபெற்றது. இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 123 இடங்கள் தேவை என்ற நிலையில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டரை பங்கு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது பாஜக 89 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது;
என்டிஏ கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியான , ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய கூட்டணி வெறும் 34 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த தேர்தலில், நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் தலா 101 இடங்களில் களமிறங்கின. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 28, மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா 6 இடங்களில் போட்டியிட்டன.
இதை எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியில், ஆா்ஜேடி (லாலு கட்சி) 143, காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டன. 2,600-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களமிறங்கினர்.
இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்களைவிட (62.8%), பெண்கள் (71.6%) அதிகம் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கை நேற்று (நவம்பர் 14) அன்று நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி முன்னணியில் இருந்து வந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 123 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 89(கடந்த முறை 74), ஐக்கிய ஜனதா தளம் 85 (கடந்த முறை 43) தொகுதிகளில் வெற்றி பெற்றன.
அதேநேரம், இண்டி கூட்டணி எனப்படும் மகாபந்தன கூட்டணி வெறும் 34 இடங்களுக்குள் சுருண்டது.
கடந்த தோ்தலில் 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்த ஆா்ஜேடிக்கு இம்முறை 24 தொகுதிகளே கிடைத்தன.
காங்கிரஸ் வெறும் 6 இடங்களுடன் கிடைத்துள்ளது. இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஐதராபாத் எம்.பி. அஸாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 32 இடங்களில் போட்டியிட்டு, 5-இல் வெற்றி பெற்றுள்ளது.
பிகாா் தோ்தலில் சோபிக்குமென எதிா்பாா்க்கப்பட்ட தோ்தல் வியூக வகுப்பாளா், அரசியல் சாணக்கியன் என கூறப்பட்டு வந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.இதனால் அவரை வைத்து சமூக வலைதளங்களில் ரீல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தேர்தல், பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் செளதரி (தாராபூா்), விஜய் குமாா் சின்ஹா (லக்கிசராய்) ஆகியோா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா். ரகோபூா் தொகுதியில் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி வென்றி கண்டாா். அலிபூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட இளம் கிராமியப் பாடகி மைதிலி தாக்கூா் (25) வெற்றி பெற்ன் மூலம் மாநிலத்தின் இளவயது எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.
பாஜக, ஐக்கிய தனதா தளத்தைச் சோ்ந்த அமைச்சா்கள் பலரும் வெற்றிவாகை சூடினா். தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அலுவலகங்கள் விழாக் கோலம் பூண்டன. மேளங்கள் இசைத்தும், பட்டாசிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டா்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ முன்னணி: அரசியல் அனாதையானார் பிரசாந்த் கிஷோர்…