பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலின் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று  18 மாவட்டங்களில்  122 தொகுதிகளில்  நடைபெறும் வாக்குப்பதிவில், ஆயிரத்து 302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை  நிறைவேற்றி வருகின்றனர். பல பகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்திற்கு பிறகு பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.  மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி, 121 தொகுதிகளில்  ஏற்கனவே  வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவில் இதுவரை இல்லாத அளவில் சுமார் 64 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. அதனை தொடர்ந்து, இன்று மீதமுள்ள 122 தொகுதிகளிலும்  இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிது.

இந்த வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில், ஆயிரத்து 302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்களிக்க ஒரு கோடியே 74 லட்சம் பெண் வாக்காளர்கள் உட்பட, சுமார் 3.7 கோடி பேர்   தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் வருபவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் முக்கியமானவர்கள்  பலர் போட்டியிடுகின்றனர். முன்னாள் துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் (கடிஹார்), முன்னாள் சபாநாயகர் உதய் நரேன் சவுத்ரி (சிகந்திரா), மற்றும் முன்னாள் அமைச்சர்களான வினய் பிஹாரி (லௌரியா), நாராயண் பிரசாத் (நௌதன்), ஷமிம் அகமது (நர்கடியா), ராணா ரந்தீர் சிங் (மடுபன்), பிரமோதி குமார் (மடுபன்), பிரமோதி குமார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ரேணு தேவி ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர்.

இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் முதலமைச்சராக தொடர்கிறார். அவரது பதவிக்காலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தொடருமா? என்பதை இந்த பொதுத்தேர்தல் தீர்மானிக்க உள்ளது.

இரண்டு கட்டங்களாக பதிவாகும் வாக்குகள் வரும் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்ட வெடி விபத்து தீவிரவாதிகளின் தாக்குதலா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.