திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று  இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் .

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மாலை கேரள மாநில தலைவர் திருவனந்தபுரம் வருகை தந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இன்று இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார். அவரது ஆன்மீக வருகை இந்தியாவின் மத மரபுகள் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையை எடுத்துக்காட்டுகிறது.

குடியரசு தலைவர் சபரிமலை செல்வதற்காக இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து  விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் மழை மற்றும்  வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது.  . அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கிவந்தார்.

குடியரசு தலைவர் முர்முவை,  தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார். அங்கு அவர் பம்பா நதியில் நீராடும் வகையில்,  திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார்.

பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.  பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.‘ முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சபரிமலை அய்யப்பனை தரசிக்க பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி குடியரசு தலைவர்   இருமுடியுடன் பதினெட்டாம் படிகளில் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்புகிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.