சென்னை: குடியரசு தலைவர் முர்மு 4 நாள் பயணமாக இன்று கேரளா வருகை தருகிறார். நாளை சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.

கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையிலும், அய்யப்பனை தரிசிக்கவும் ஜனாதிபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று கேரள மாநில தலைவர் திருவனந்தபுரம் வருகிறார். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளதால், ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான நாளை திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார்.
இன்று திருவனந்தபுரம் வரும் குடியரசு தலைவர், இன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். நாளை (22ற்தேதி) காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் , பம்பையில் நீராடி, அங்கு இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார். பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.
பின்னர், நாளை மறுதினம், 23-ந்தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார்.
தொடர்ந்து 24-ந்தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக சபரிமலைக்கு வருவதையொட்டி இன்றும், நாளையும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.