டெல்லி: செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 45 பேருக்கு  தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.

ஆசிரியர் தினமான(செப்டம்பர் 5) நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகர் லியில் நடைபெற்ற விழாவில், நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட45  விருது பெற்றவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

ஆசிரியராகப் பணியாற்றி ஜனாதிபதியாக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் இருவர், புதுச்சேரியில் ஒருவர் உள்பட நாடு முழுவதிலும் 45 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இந்தாண்டு கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.

தமிழகத்தில், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.