காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு நேசக்கரம் நீட்டி, நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை (செப்டம்பர் 2ந்தேதி) ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பலமுறை நில அதிர்வுகளும் உணரப்பட்டன. பல கட்டிங்கள் விழுந்து நொறுங்கியது. அதனுள் ஏராள மானோர் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக, அங்குள்ள குனார், லக்மான், நங்கர்ஹார் மற்றும் நூரிஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, 1,100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும், 3,500க்கும் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது ( செப்.3 ந்தேதி காலை நிலவரம்) பலி எண்ணிக்கை 1,411-ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் சுமார் 12,000 மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பலி எண்ணிக்கை 1400 தாண்டி உள்ளதாகவும், 3000க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி நிறுவனங்களின் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. முதற்கட்ட மாக, இந்தியத் தூதரகத்தின் மூலம் 15 டன் உணவுப் பொருட்கள் காபூலிலிருந்து குனார் பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி மூட்டைகளுடன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வானங்களை படங்களை வெளியிட்ட இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்த இக்கட்டான நேரத்தில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளது.