டெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்‘ என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு உதவ முன் வராத அரசியல் கட்சிகளின் செயல், ஆச்சரியமளிப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பீகாரில் சுமார் 65லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வரைவு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது எதிர்க்கட்சிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், இது பாஜக அரசின் ஓட்டு திருட்டு என விமர்சித்தன. மேலும் பாராளுமன்ற அவை நடவடிக்கையையும் அமளி செய்து தடுத்தன.. இதற்கிடையில், உச்சநீதிமன்றத்திலும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், விடுபட்டதற்கான காரணம் உள்ளிட்டவற்றுடன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்ச -நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, விடுபட்ட வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, மக்களுக்கு உதவுமாறு பதிவு செய்யப்பட்ட 12 பெரிய அரசியல் கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் எண்ணை வைத்து விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளனர். மேலும், இந்த நடைமுறையானது வாக்காளர்களுக்கு எளிமையாக இருக்கும்படி அமைத்துத் தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு உதவ முன் வராத அரசியல் கட்சிகளின் செயல், ஆச்சரியமளிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்திருக்கிறது.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விண்ணப்பக் கோரிக்கைகளை அளித்தது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த விசாரணையின்போது அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு, செப்டம்பர் 8ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் அளிக்கும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கான விண்ணப்பங்களுக்கு உரிய ரசீதுகளை வழங்கவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.