டெல்லி: இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல என தெருநாய்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் அனைத்து பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களை கூடிய விரைவில் டெல்லி அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் பிடி;jJ நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும். தற்போதைக்கு சுமார் 5 ஆயிரம் தெருநாய்களை அடைக்கும் அளவுக்கு காப்பகங்களை உருவாக்க வேண்டும். அங்கு தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், நோய்த்தடுப்பு மருந்துகளை அளிக்கவும் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதிகாரிகள் தெருநாய்களை பிடிப்பதற்கு எதிராக தனிநபர்களோ, அமைப்புகளோ குறுக்கே வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதுபோல எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. நாட்டிலேயே தெருநாய்களின் தொல்லையால் அதிக அளவில் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ரை 3.67 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு; நடப்பாண்டில் மட்டும் இதுவரை 20 பேர் நாய்க்கடியால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், சென்னை உள்பட பல பகுதிகளில் உள்ள மக்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
டெல்லி-என்.சி.ஆரில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பல தசாப்தங்களாக மனிதாபிமான, அறிவியல் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கொள்கையிலிருந்து ஒரு படி பின்வாங்குவதாகும்.
இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல.
தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவை கொடுமை இல்லாமல் தெருக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் –
ஆனால், அவற்றை ஒட்டுமொத்தமாக அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வை கொண்டது, மேலும் நம் இரக்கத்தை பறிக்கிறது.
பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்கு நலனும் ஒன்றிணைந்து கைகோர்த்துச் செல்வதை நாம் உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு கூறியுள்ளார்.