டெல்லி: தனது மிரட்டலை தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதும்போல பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது-

இந்த நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.  இந்த விஷயத்தில்  3-வது நாட்டின் தலையீடு இருக்காது என கூறப்பட்டுள்ளதுடன்,  இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் எ எரிசக்தி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்கூறிய, ரந்தீர் ஜெய்ஸ்வால், எரிசக்தி தேவைகளில் எங்கள் அணுகுமுறை என்பது சந்தைகளில் என்ன சலுகைகள் உள்ளன என்பதையும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அது சந்தை இயக்கவியல் மற்றும் தேசிய நலனால் வழிநடத்தப்படுகிறது. இந்தியாவும், ரஷியாவும் நிலையான கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன. அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் பல சவால்களைச் சமாளித்து வந்துள்ளது. இரு நாடுகளின் கூட்டாண்மை பல மாற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி வந்துள்ளது. இந்த உறவை முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளது. இரு தரப்பினரும் உறவை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நடவடிக்கையில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இந்த நட்புறவு தொடர்ந்து முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இரு தரப்பு உறவுகள் அந்நாடுகளின் சொந்த தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. இதில் 3-வது நாட்டின் தலையீடு இருக்காது என்றார்.

முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் முக்கிய விமானங்கள் சூறையாடப்பட்டன. இந்த விமான நிலையங்களை அமெரிக்கா தனது கண்டோலில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதன்மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லியதாக்குதலால் அதிர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தான் நாட்டுடன் கச்சா எண்ணை ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கக்கூடாது என்று மிரட்டி வருகிறார். இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாத நிலையில் இந்தியா மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். மேலும் ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வாங்கி வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு அபராத வரியும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியா, ரஷிய பொருளாதாரங்கள் இறந்த பொருளாதாரங்கள் என்றும் டிரம்ப் விமர்சித்தார். இதை வைத்து  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்திய அரசை விமர்சித்து வருகின்றன.

இதுபோன்ற விஷயத்தில் தீவிரம் காட்டாத மத்திய பாஜக அரசு,  அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சை பொருட்படுத்துவது இல்லை.  நமது நாட்டின் கொள்கை முடிவுகளில்  அமெரிக்கா உள்பட அந்நிய நாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.