டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின்போது பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.

‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் பயங்கரவாதத் தாக்குதல் கடந்த ஏப்ரல் 22ந்தேதி (22/04/2025) அன்று நடைபெற்றது. சுற்றுலாதலமான அங்கு சம்பவத்ன்று சுற்றுலாப் பயணிகள் குழு சென்றிருந்தது. அவர்கள்மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், ஒவ்வொரு ஆணையும், அவர் இந்துவான என கேள்வி எழுப்பி இந்தத் தாக்குதலை நடத்தியது. இதில், 26 சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 தமிழர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் 17 சுற்றுலா பயணிகள் காயங்களோடு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்தியா உள்பட உலக நாடுகளை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு இந்திய அரசு பதிலடி கொடுத்தது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானுக்குள் சென்று அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் எல்லை பகுதி கிராமங்களில் ஊடுருவி அப்பாவி பொதுமக்களின்மீது தாக்குதல் நடத்தியது.
காஷ்மீர் மாவட்டம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் படைகள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில் மட்டும் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குழந்தைகள் அனாதையாகி உள்ளனர். இதுபோன்ற சுமார் 22 குழந்தைகளை தத்தெடுக்க போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரண்டாவது முறையாக காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மக்களையும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளையும் சந்தித்து பேசினார்.
பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தாக்குதலில் இடிந்த வீடுகள், வழிபாட்டு தலங்களையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்குள்ள பள்ளிக்கு சென்று மாணவர்களோடு உரையாடிய ராகுல் காந்தி; நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் சிறிய நண்பர்களை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இப்போது, நீங்கள் சற்று ஆபத்தையும், பயத்தையும் உணர்கிறீர்கள், ஆனால் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சாதாரணமாகிவிடும். இதற்கு உங்கள் பதில் மிகவும் கடினமாகப் படிப்பது, கடினமாக விளையாடுவது மற்றும் பள்ளியில் நிறைய நண்பர்களை உருவாக்குவதுதான் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பெற்றோரை இழந்த 22க்கும் மேற்பட்ட குழந்தைகளை ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோர் இழந்த 22 குழந்தைகளின் கல்விச்செலவை ராகுல் காந்தி ஏற்பார் என்று ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடர ஏதுவாக, உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும் என்றும், இந்தக் குழந்தைகள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை உதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.