டெல்லி

நிதிஷ்குமாருக்கு துணை ஜனாதிபதி பதவி அளிக்க ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் எழுதினார். அதில், பதவி காலத்தில் இந்திய ஜனாதிபதி அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமருக்கும், மந்திரிகள் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

தனது திடீர் பதவி விலகலுக்கு உடல்நல பிரச்சினைகளை அவர் காரணமாக கூறி இருந்தாலும், இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் நெருக்கடி இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் நீதித்துறையுடன் அவருக்கு இருந்த மோதல் போக்கு காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது,  பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு ராஜதந்திர நடவடிக்கையாகவும் இது நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் நிதிஷ்குமாரை துணை ஜனாதிபதி ஆக்கி, பீகாரை பா.ஜனதா ஆட்சி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இந்ப்சி எதுவும் அதிகாரப்பூர்வமானதாக இல்லாததால் அடுத்த துணை ஜனாதிபதியாக இன்னார் வருவார் அல்லது இவர் வருவார் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.  அதாவது ஜே.பி.நட்டா, சசிதரூர், தற்போதைய மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ்  நாராயண்சிங் போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகிறது.

ஜே.பி.நட்டா பா.ஜனதா தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்பதாலும், மாநிலங்களவை அனுபவம் இருப்பதாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. சசிதரூர், காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தாலும் பா.ஜனதாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்ததால் அவரும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறார். இந்த யூகங்களுக்கு இடையே சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரும் அடிபடுகிறது.