திருவனந்தபுரம்

கேரள முன்னாள் முதல்வர் வி எஸ் அச்சுதானந்தன் மறைவையொட்டி இன்ரு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது,/

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று மரணம் அடைந்தார்.. அவருக்கு வயது 101. வயது முதிர்வால் 2019-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த அவருக்கு, கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறுநீரக பிரச்சினையாலும் அவர் அவதிப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு மரணம் அடைந்தார்.

அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் ஏ.கே.ஜி. கல்வி ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியதும், இரவு 8 மணிக்கு அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைமை செயலக தர்பார் அரங்கில் வைக்கப்படுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு தேசிய பாதை வழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஆலப்புழை எடுத்து செல்லப்பட்டு நாளை (புதன்கிழமை) காலையில் ஆலப்புழை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் ஆலப்புழை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள், காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவிதுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.