டெல்லி: ராஜ்யசபா தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான ஜெகதீப் தன்கர் (வயது 74) திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியுள்ளதால், அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் கிடைத்த அசைக்க முடியாத ஆதரவிற்கும், அமைதியான பணி உறவுக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமருக்கும், அமைச்சர்கள் குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை; மேலும், நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் பாசம் என்றென்றும் நினைவில் இருக்கும்.
நமது மாபெரும் ஜனநாயகத்தில் குடியரசு துணைத் தலைவராக நான் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் பரந்த அறிவுக்காக நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன். இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அதிவேக வளர்ச்சியையும் நேரில் காண்பது மிகுந்த பெருமையான தருணம். இந்த மதிப்புமிக்க அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது, நாட்டின் எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.
நாட்டின் பிரகாசமான எதிர்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
