சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5000  நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் திடீர் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த  திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரை காணவில்லை என்றும், மண்டியில் மட்டும் 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.  அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன்,.  ரூ.700 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடனஇ,  முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால்இ,    மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஜூலை 7 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலக் குடும்பங்களுக்கு தனது அரசாங்கம் துணை நிற்கும் என்றும்,  ஒவ்வொரு குடும்பத்திற்கும் “வாடகை தங்குமிடமாக” ரூ.5,000 வழங்கப்படும் என்றும்  மாநில முதல்வர்  சுகு கூறினார். குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட மண்டி மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.