சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய கேபினட் கூட்டத்தில் திருப்பதி – காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை உள்பட ரூ.6405 கோடி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதில் குறிப்பாக, திருப்பதி – காட்பாடி இடையே ரூ.1,332 கோடி மதிப்பிலான இரட்டை ரயில் பாதைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (ஜூன் 12) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ரயில்வே சார்பில் ரூ.6405 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, ”முதல் திட்டம் ஜார்க்கண்டின் ஒரு முக்கிய நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதி வழியாக செல்லும் 133 கி.மீ கோடெர்மா-பர்ககானா ரயில் பாதையை இரட்டிப்பாக்குவது தொடர்பானது. இது பாட்னா மற்றும் ராஞ்சி இடையே குறுகிய மற்றும் திறமையான ரயில் இணைப்பாக செயல்படுகிறது.
இரண்டாவது திட்டம் கர்நாடகாவின் பல்லாரி மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, அனந்தபூர் மாவட்டம் வழியாக செல்லும் 185 கி.மீ நீளமுள்ள பல்லாரி-சிக்ஜாஜூர் ரயில் பாதையை இரட்டிப்பாக்குவதை உள்ளடக்கியது
அத்துடன், திருப்பதி (ஆந்திரா மாநிலம்) – காட்பாடி (தமிழ்நாடு) இடையே ரூ.1332 கோடி மதிப்பிலான இரட்டை ரயில் பாதைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த இரண்டு திட்டங்களும், இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 318 கி.மீ அதிகரிக்கும் மற்றும் கட்டுமானத்தின் போது சுமார் 108 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட திட்டம் சுமார் 28.19 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுமார் 1,408 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். அதிகரித்த ரயில் பாதை திறன் இயக்கம் கணிசமாக அதிகரிக்கும். இதன் விளைவாக இந்திய ரயில்வேயின் செயல்பாட்டு திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மை மேம்படும்.
இந்த பல்நோக்கு திட்டங்கள், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும் உதவுகின்றன. இந்தத் திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ‘புதிய இந்தியா’ என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப உள்ளது. இது பிராந்திய மக்களை ‘ஆத்மநிர்பர்’ ஆக்குகிறது. இது அவர்களின் வேலைவாய்ப்பு /சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்.
இந்த திட்டங்கள், ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமான பல மாதிரி இணைப்புக்கான PM-Gati Shakti தேசிய மாஸ்டர் திட்டத்தின் விளைவாகும். மேலும் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.
இதையும் படிங்க: “பணத்துக்காக ஐயாவை மறந்து அவர் கூட போனியே…” – பாமக பாலுவை விமர்சித்து கோபு பாடிய பாடல் வைரல்!
நிலக்கரி, இரும்புத் தாது, முடிக்கப்பட்ட எஃகு, சிமென்ட், உரங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்துக்கு இவை அத்தியாவசியமான பாதைகளாகும். திறன் மேம்பாட்டுப் பணிகள் 49 MTPA (ஆண்டுக்கு மில்லியன் டன்) அளவிலான கூடுதல் சரக்கு போக்குவரத்தை ஏற்படுத்தும்.
சுற்றுச் சூழலுக்கு உகந்த மற்றும் எரிசக்தி திறன் கொண்ட போக்குவரத்து முறையாக ரயில்வே இருப்பதால் காலநிலை இலக்குகளை அடைவதற்கு நாட்டின் தளவாடச் செலவைக் குறைப்பதற்கும், எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு (52 கோடி லிட்டர்) மற்றும் CO2 உமிழ்வை குறைக்கவும் (264 கோடி கிலோ) உதவும். இது, 11 கோடி மரங்களை நடுவதற்கு சமம்.” என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.