அயோத்தி
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கோபுரத்தில் தங்க முலாம் பூசும் பணி தொடங்கி உள்ளது.

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுகடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு முதல்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட கும்பாபிஷேக விழா, நடந்து முடிந்தது.
இதைத் தொடர்ந்து 2-ம் கட்ட பணிகளில் இதர சன்னதி கட்டுமானங்கள் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த கோவில் கோபுரங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான நிபுணர் குழுவினர் அயோத்தி வந்துள்ளனர்.
நேற்று கோவில் கட்டுமான குழு தலைவர் செய்தியாளர்களிடம்,
“நிபுணர்கள் மேற்பார்வையில் முலாம்பூசும் பணி தொடங்கி உள்ளது. 3 வாரங்களில் பணிகள் நிறைவடையும். கோவிலுக்கு ராமர், லட்சுமணன் மற்றும் சீதா சிலைகள் ஏற்கனவே வந்துவிட்டன. கோவிலின் முதல் மாடியில் அவை நிறுவப்படும்.
ஜூன் 5-ந்தேதி புதிய ராம் தர்பாரில் கும்பாபிஷேகம் நடைபெறும். கோவில் வளாகத்திற்குள் மீதமுள்ள கட்டுமானப் பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும்”
என்று தெரிவித்துள்ளார்.