டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு டெல்லியில் உள்ள நீதிபதி வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயில் பாதி எரிந்த நிலையில் இருந்த கணக்கில் காட்டப்படாத பணத்தை மீட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டை நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட உள் விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்ச் 22ம் தேதி உத்தரவிட்டார்.

இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்த குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு மார்ச் 25 ஆம் தேதி விசாரணையைத் தொடங்கி, மே 4 ஆம் தேதி தலைமை நீதிபதி கன்னாவிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

“பணியில் இருக்கும் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு, மே 3 தேதியிட்ட தனது அறிக்கையை மே 4 அன்று தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்தது” என்று உச்ச நீதிமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாக பார் அண்ட் பெஞ்ச்-சை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.