சென்னை: ‘நீட் விலக்கு’ என கூறி மாணவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும் என தவெக தலைவர் விஜய் காட்டமாக விமர்சித்து உள்ளார்.
நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்கிறது என்று சொன்னவர்கள் இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று அன்றி வேறென்ன? என கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 2021ம் சட்டமன்ற தேர்தலின்போது, நீட் வைத்து திமுக அரசியல் செய்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் விலக்குதான் என்று முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் வாக்குறுதி கொடுத்ததுடன், திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் நீட் விலக்கு எதிரொலித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை திமுக அரசால் நீட் விவகாரத்தில் ஏதும் செய்ய முடியாத நிலையே தொடர்கிறது. தமிழக மாணவர்களும் நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராகிவிட்டனர். அதிக அளவில் தேர்ச்சிகளும் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் நிலக்கு விலக்கு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது விவாதப்பொருளாக மாறியது. இந்த கூட்டத்தை முக்கிய கட்சிகளான அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலேசானை நடத்தி தீர்மானமும் போட்டுள்ளது. திமுக அரசின் நீட் நாடகம் குறித்து கடுமையாக சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது
இது தொடர்பாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப் பெரிய பொய் என்பதே திமுக தலைமையின் அறமற்ற அரசியல். பொய்வேடம் தரிக்கும் கபட நாடகத் திமுக தலைமையின் பொய்முக வரலாறு அன்றில் இருந்து இன்றுவரை நில்லாமல் நீள்கிறது. எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானப் பொய்களின் பட்டியலைத் தேர்தல் அறிக்கையாக 2021 தேர்தலின்போது(ம்) வெளியிட்டது. அப்பட்டியலின் முக்கியப் பொய்களில் ஒன்றுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சி (வாக்குறுதி எண்: 160) என்ற அறிவிப்பு. அத்துடன் தேர்தல் களத்தில், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி மோசடிப் பிரசாரம் வேறு.
ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அது மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ளது என்று சொல்லித் தப்பித்தனர். பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள். இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால். மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்.
அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் என்ற ஓர் நாடகத்தையும் இப்போது அரங்கேற்றி உள்ளனர். இயலாமையை மறைப்பதற்காக. எல்லாவற்றிற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்றப் பேரவையில் தனித் தீர்மானம் என ஏதாவது ஒருவகையில் திசைத்திருப்பி மக்களை ஏமாற்றுவதுதான் திமுக தலைமையின் தொன்று தொட்ட வழக்கம்.
அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆலோசனைகளை வேறு முதலமைச்சர் கேட்டிருக்கிறார். நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்கிறது என்று சொன்னவர்கள் இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று ஆலாபனை அன்றி வேறென்ன?. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் நமது சமரசமற்ற நிலைப்பாடு.
மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்படுவதே நிரந்தரத் தீர்வு. சிறப்பு ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும் என்பது ஒரு தற்காலிகத் தீர்வு என்றும் நாம் கூறினோம். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக மட்டுமன்று, நிரந்தரமாக மக்கள் பக்கம் நிற்கும் நாம். எப்போதும் இப்படித்தான் எதிலும் தீர்வை நோக்கியே யோசிப்போம். திமுக அரசோ, மக்களை ஏமாற்றும் கபட நாடகக் கச்சேரிகளை மட்டுமே நிகழ்த்துகிறது. மக்கள் விழித்துக்கொண்டனர். இனி அவர்களை வஞ்சித்து ஏமாற்ற முடியாது.
இதுவரை எம் மாணவச் செல்வங்களையும் பொதுமக்களையும் ஏமாற்றியதற்குத் திமுக தலைமை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். திமுக தலைமை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கும் தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர். மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, அதை நிகழ்த்திக் காட்டுவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு. நிச்சயமாக அது 2026-இல் நிகழும். நிகழ்ந்தே தீரும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
