பீட்

காராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் காவல்துறை சீருடை பேட்ஜில் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து சமூக பதற்றம் ஏற்பட்டது .மேலும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், போலீசின் சீருடையில் உள்ள பெயரின் மூலம் சாதியை அறிந்துகொண்டு, அந்த போலீஸ் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், தான் பிடிபட்டதை சாதியப் பிரச்னையாக திசை திருப்பும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தன.

இதையொட்டி மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிக்கும் முயற்சியாக, காவல்துறையினர் இனி தங்கள் சீருடையில் உள்ள பேட்ஜில்(Badge – பெயர் பலகை) இருக்கும் சாதி பெயரை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பீட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறையின் பிற அலுவலகங்களில் இதுபோல் சாதி பெயர் நீக்கம் செய்யப்பட்ட சுமார் 100 பேட்ஜ்கள் விநியோகிக்கப்பட்டு காவல்நிலைய மேஜைகளில் உள்ள பெயர் பலகைகளிலும் சாதி பெயரை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.