டெல்லி
வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளின் 2 நாள் கூட்டம் தொடங்க உள்ளது.

கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் றுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும் 4 ஆம் தேதி இந்த 2 நாள் மாநாடு டெல்லியில் தொடங்க உள்ளது.
டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும் மாநாட்டில் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரியையும் பங்கேற்க தலைமை தேர்தல் அதிகாரிகள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இது முதல்முறை ஆகும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அனுபவ ரீதியாக மேலும் கற்றுக்கொள்வதற்கான ஒரு தளத்தை இம்மாநாடு வழங்குகிறது.
முதல் நாளில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, பயனுள்ள தொடர்பு, சமூக ஊடக அணுகலை மேம்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறைகளில் பல்வேறு செயல்பாட்டாளர்களின் சட்டப்பூர்வ பங்கு உள்ளிட்ட நவீன தேர்தல் மேலாண்மையின் முக்கிய பகுதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
2-வது நாளில், முந்தைய நாளின் கருப்பொருள் விவாதங்கள் குறித்த செயல் திட்டங்களை அதிகாரிகள் முன்வைக்கிறார்கள். இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.