டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பீதியடைந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

டெல்லி ரயில் நிலையத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக நேற்று நடைபெற்ற விபத்தில் 18 பேர் பலியான நிலையில் இந்த நிலநடுக்கம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.
டெல்லி தவிர, பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வடமாநிலங்களில் மக்கள் பெருமளவு பீதியடைந்துள்ள நிலையில், டெல்லி மக்கள் பதற்றத்தை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், டெல்லியின் நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.