அயோத்தி: தீப ஒளி திருநாளான  தீபாவளியையொட்டி, அயோத்தியில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்க உ.பி. மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி,  மாநிலத்தில் உள்ள சரயு  நதிக்கரைகளில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள்  இதற்கான நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில்,  எட்டாவது ஆண்டு தீபாவளி விழாவை, அயோத்தியில்,  பிரமாண்டமாகவும் தெய்வீகமாகவும் கொண்டாட தீர்மானித்துள்ளது. இதையொட்டி,  மாநிலத்தில் உள்ள 55 புனித நதிக்கரைகளில்,   28 லட்சம் விளக்குகளை ஏற்றி புதிய உலக சாதனை படைக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  ராம் கி பைடி, சவுத்ரி சரண் சிங் காட் மற்றும் பஜன் சந்தியா தாள் உட்பட 55 கரைகளிலும் காட் ஒருங்கிணைப்பாளர்களின் மேற்பார்வையில் விளக்குகள் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது.  இந்த பணியில்,  14 இணைக்கப்பட்ட கல்லூரிகள், 37 இடைநிலைக் கல்லூரிகள் மற்றும் 40 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 30,000 தன்னார்வலர்கள் இந்த நிகழ்வில் தீவிரமாக பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி, ராம் கி பைடியின் காட் ஒன்றில் 65,000 விளக்குகளை ஏற்ற 765 தன்னார்வலர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.  அதே நேரத்தில் காட் இரண்டில் 38,000 விளக்கு களுக்கு 447 தன்னார்வலர்கள் பொறுப்பேற்பார்கள். இதேபோல், காட் மூன்றில் 48,000 விளக்குகளுக்கு 565 தன்னார்வலர்களும், காட் நான்கில் 61,000 விளக்குகளுக்கு 718 தன்னார்வலர்களும் பணி அமர்த்தப்படுவார்கள். அனைத்து 55 கரைகளிலும் இதேபோல் விளக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன்னார்வலர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  தீபாவளி விழாவின் நோடல் அதிகாரி பேராசிரியர் சாந்த் சரண் மிஸ்ரா, இந்த ஆண்டு  அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும்   தீபாவளி விழா ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றவர், சரயு கரைகளுக்கு விளக்குகள் அக்டோபர் 24 முதல் வரத் தொடங்கியுள்ளன, மேலும் அக்டோபர் 25 முதல் கரைகளில் விளக்குகளை வைக்கும் பணியும் தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். இந்த பணியில் ஈடுபடும்   தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை விநியோகமும் தொடங்கப்பட்டுள்ளது, இதில் 15,000 க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் நிறுவன அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதையொட்டி,   நேற்று முன்தினம் (அக்டோபர் 25 ஆம் தேதி) காலை   சுவாமி விவேகானந்தா அரங்கில் இறுதிப் பயிற்சி கூட்டம் நடைபெற்றதாகவும், இந்த  கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் பல்கலைக்கழகத்தின் அனைத்து டீன், துறைத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், முதல்வர்கள் மற்றும் காட் பொறுப்பாளர்கள் கலந்து  கொண்டனர்.  இந்தக் கூட்டத்தின் நோக்கம் தீபாவளி விழாவின் இறுதி ஏற்பாடுகளை உறுதி செய்வதாகும், இதனால் அக்டோபர் 30 ஆம் தேதி தீபாவளி விழா நாளில் நிகழ்வை சீராக நடத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு,  சரயு நதியின் 55 கரைகளில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது அயோத்தியை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் நிலை நிறுத்தும். இந்த தீபாவளி விழா மதக் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, அயோத்தியின் கலாச்சார பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வை தெய்வீகமாகவும் பிரமாண்டமாகவும் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.