டெல்லி

ங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி நோக்கி கிளம்பிய விஸ்தாரா விமானத்தில் சுமார் 290 பயணிகள் இருந்தனர். நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்த ஒரு துண்டு காகிதம் விமானத்திற்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என விமானத்தில் இருந்த ஊழியர்கள் விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். அவ்வாறு எதுவும் இல்லாததால் தொடர்ந்து டெல்லியை நோக்கி விமானம் இயக்கப்பட்டு டெல்லி விமான நிலையத்தில் 290 பயணிகளுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள், விமானம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.