டெல்லி: அரசு பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்றப்பட்டது தொடர்பான பண மோசடி வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்,  மற்றும் அவரது இரு மகன்களுக்கும்  டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியை நிறுவிய லாலுபிரசாத் யாதவ், மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தலைமையிலான ஆட்சி ஆதிகாரத்தின்போது ஏராளமான ஊழல்களை செய்துள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நலத்தை கருத்தில்கொண்டு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது.

இநத் நிலையில், அரசு பணிக்கு நிலம் கையூட்டு பெற்றதாக தொடர்பான வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப்புக்கு ஜாமின் வழங்கி உள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது குருப்-டி பதவிகளுக்கு பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில்,ரயில்வே குருப் டி பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் பலரின் நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பெயருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது.

லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்டோரின் பெயர்களில் நிலங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, மிசா பாரதி, தேஜஸ்வி யாதவ், அப்போதைய ரயில்வே பொது மேலாளர் உள்பட மொத்தம் 17 பேர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2022, மே 18 ஆம் தேதி இது தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த 2023, அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இதில் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை துணை குற்ற பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. முன்னதாக, அக்-7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி லாலு பிரசாத், தேஜஸ்வி ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதன்படி, பண மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின் வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ உத்தரவிட்டுள்ளது. அவரது மகன்களான தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கும் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், தலா ரூ.1 லட்சத்திற்கான பிணைய தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது.