டெல்லி

பிரகாஷ் காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  இடைக்கால ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச தொற்று பாதிப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

டெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில், மதுரையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழுவின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த முடிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உயிரிழந்ததை அடுத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 முதல் 2015 வரை சிபிஐஎம் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் காரத், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.