டெல்லி

பாஜக நிர்வாகிகளின் ராகுல் காந்தி குறித்த வெறுப்பு பேச்சு குறித்து காவல்துறையினரிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

சமீப காலமாக இந்திய அரசியல் களத்தில் விமர்சனங்கள் எல்லைமீறி போகின்றன. குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் மிரட்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் பேசுகின்றனர்.

அண்மையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் தாக்கி அவர் பேசியது சர்ச்சையானது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இப்படி விமர்சனம் செய்தவர்களில் ராகுல் காந்திக்கு எதிரான வெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் தொனியிலும் பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான தர்வீந்தர் சிங் மர்வா, ரகுராஜ் சிங், ரன்வீத் பிட்டு (மத்திய ரெயில்வே இணை மந்திரி) மற்றும் சிவ சேனா கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் ஆகியோர் மீது டெல்லி தவுலக் ரோடு காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை அளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான்,

“நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை பயங்கரவாதி என்று அழைப்பது, அவர் மீது பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தனிப்பட்ட வெறுப்பையே காட்டுகிறது. மக்களிடையே கலவரத்தைத் தூண்டி அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு பேசுகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசும் அளவிற்கு இந்திய அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது”

என்று கூறி உள்ளார்.