டெல்லி

டெல்லி உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு நில மோசடி வழக்கில் சம்மன் அளித்துள்ளது.

ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். கடந்த 2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் அண்மையில் அமலாக்கத்துறை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 6ம் தேதி லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மொத்தம் 38 வேட்பாளர்கள் உள்பட 78 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரியின் அனுமதிக்காக காத்திருப்பதாக சிபிஐ கோர்ட்டில் தெரிவித்ததையடுத்து வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் டெல்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருகின்ற 7ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.